Subscribe Us

header ads

எதுக்குத்தானோ இந்த கண்ணானோ(ம்)? {கல்யாணம்} - கவிதை


                      ☆கல்யாண மாயை!



இருவது வயசாச்சி
இங்கிதமா வாழ்ந்தாச்சி
இப்போ எதுக்குத்தானோ -இந்த
இம்சையான கண்ணானோ(ம்)?
(கல்யாணம்)

தாம்பூழம் மாத்திப்புட்டு
தாலிகட்டி கூட்டிப்போயி
நகநட்டு பூட்டிவச்சி
நல்ல நேரம் குறிச்சிக்கிட்டு....

ஒடம்புத்தான் அம்மிக்கல்லா
மனசுத்தான் குலவிக்கல்லா?
உசுர வச்சி அரைச்சி வாழ
எதுக்கு இந்த கண்ணானோ(ம்)?

மாப்புள்ள வந்தாக்க
தேத்தண்ணி கொடுத்துப்புட்டு
விரலுல கோலம் போட,
புடிச்சுருக்குன்னு அவன் சொல்ல...

புடிக்கலன்னு சொன்னாக்க
அறுவா வரும் கழுத்துக்கு
குனிஞ்ச தல நிமுராம
புடிக்கிதுன்னு சொல்லிப்புட்டு...

காலம் முழுக்க ரணமாத்தான்
குமுறி அழுற வாழ்க்கையுமே
புள்ளையத்தான் பெத்தாக்க
இல்லாமத்தான் போயிடுமா?

மூனு புள்ளைய பெத்துப்புட்டே(ன்)
புருசனுக்கு வடிச்சிப்போட்டே(ன்)
இதத்தவிர அம்பதுல நான்
பாக்கப்போற சுகந்தான் என்ன?

சாதிக்க எம்புட்டு இருக்கு,
ஒடம்புலத்தான் என்ன இருக்கு!
மண்ணைத் தேடுற ஒடம்புக்கு
மகிழ்ச்சி ஒன்னும் தேவையில்ல!

வேண்டாம்ப்பா கண்ணானோ(ம்)
காலத்துக்கும் கஸ்டப்பட!
போதும்ப்பா இந்த வாழ்க்க
சந்தோஷமா வாழுறனே!

கண்ணானோ(ம்) பண்ணிக்கிட்டு
கண்ணக்கட்டி வாழ்றதுக்கு
கண்ணானோ(ம்) இல்லாம
கண்ணத் திறந்து வாழப்போறே(ன்)

ஆச மச்சான் வராதீஹ...
நீங்க கூட எனக்கு வேண்டா(ம்)
சொந்தமில்லா ஒலகத்தில
சொந்தமாக்க வராதீஹ...!


பிரவீனா-ஹட்டன்

Post a Comment

0 Comments