Subscribe Us

header ads

நான் வந்தால் நீ மன்னிப்பாயோ, என் மடியில் மரணிப்பாயோ சொல்லடி!-கவிதை


                  ☆பனிப்பூவே சொல்லடி!



உன்னை முதலில்
பார்த்தது நான்தானடி!
மெய்சிலிர்த்தேன்...
கைப்பிசைந்தேன்...
பார்ப்பாயா பார்ப்பாயா என
பார்த்துக்கொண்டிருந்தேனடி!

பார்த்தாயே பனிப்பூவே
பலவருடம் கழித்து பூத்ததாய்!
பருவம் பூத்தேன்...
உறவுகள் நீத்தேன்...
வருவாயா வருவாயா என
காத்துக்கொண்டிருந்தேனடி!

வந்தாயே தேவதையே
என் வாழ்வில் வானிலையாய்!
நம்பாமல் திகைத்தேன்...
உனை நம்பி அணைத்தேன்...
தருவாயா தருவாயா என
கேட்டுக்கொண்டிருந்தேனடி!

தந்தாயே தாரகையே
நான் கேளாததையும் நீயாய்!
அழகைப் பார்த்தேன்...
ஆசை வளர்த்தேன்...
புரிவாயா புரிவாயா என
ஏங்கிக்கொண்டிருந்தேனடி!

புரிந்தாயே பூவனமே
என் மனமறிந்த வண்ணமாய்!
பிணியில் நீங்கினேன்...
பிறவிப்பயன் அறிந்தேன்...
போவாயோ போவாயோ என
கேட்டுக்கொண்டிருந்தாயடி!

போய்விட்டேனே விண்மீனே
உனையள்ளி எறிந்தவனாய்!
புழுவாய்த் துடிக்கிறேன்...
புதிதாய் அழுகிறேன்...
வருவேனா வருவேனா என
வருந்திக்கொண்டிருக்கிறேனடி!

வந்தால் ஏற்பாயா....?இல்லை,
வலிகள் காப்பாயா...?
எனை மன்னிப்பாயா...?இல்லை
மரணிப்பாயா...?
சொல்லடி சொர்க்கமே!
உள்ளதை உள்ளபடி!

                 https://youtu.be/3PM8Ed27EBE
               Like,Share,Comment & Subscribe

பிரவீனா-ஹட்டன்


Post a Comment

0 Comments